ஈரான் போரால் இங்கிலாந்தில் டியூக்ஸ் பந்துக்கு தட்டுப்பாடு
லண்டன்: இங்கிலாந்தில் புகழ்பெற்ற கவுன்டி சாம்பியன்ஷிப் தொடர் வரும் ஏப். 3ம்தேதி தொடங்க உள்ளது. இதில் மொத்தம் 18 அணிகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில், அங்குப் பந்துகளின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. டியூக்ஸ் பந்துகளுக்கான தோல் இங்கிலாந்தில் பதப்படுத்தப்பட்டாலும், அதைத் தைக்கும் பணிகள் இந்தியத் துணைக்கண்ட நாடுகளில்தான் நடைபெறுகின்றன.
டியூக்ஸ் பந்துகள் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக விமானம் மூலம் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்படும்.
ஆனால், மேற்கு ஆசியப் போர் பதற்றம் காரணமாக வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பந்து விநியோகம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. விமான நிறுவனங்கள் அந்தப் பாதையைத் தவிர்ப்பதால், பந்துகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், வெறும் 50 சதவீத பந்துகளுடன் மட்டுமே சீசனைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் அணிகள் தள்ளப்பட்டுள்ளன.