ஒரே நாளில் 5 தொகுதிகளில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்..! பயண விவரம் வெளியானது..!
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த முறை தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக தேர்தல் களம் காண்கிற நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் வேட்பாளர் நேர்காணல் செய்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்தே தேர்தல் பரப்புரையை தொடங்கிய தவெக, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்திற்கு பிறகு, பரப்புரையை தற்காலிகமாக நிறுத்தியது. பிறகு மீண்டும் பரப்புரையை தொடங்கிய நிலையில், அரசு அனுமதி கொடுக்க மறுப்பதாகவும், மற்ற கட்சிகளை விட தங்கள் கட்சிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
ஆனால் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் பரப்புரைக்கான அனுமதி அளிப்பது இப்போது தேர்தல் ஆணையத்திடம் உள்ளது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பரப்புரையை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, அந்த கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.
இந்நிலையில், தவெக தலைவர் விஜய் நாளை மறுநாள் (மார்ச் 28) ஒரே நாளில் 5 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காகக் காவல் துறையிடம் அளிக்கப்பட்ட அனுமதி கோரும் கடிதத்தில், ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 3,000 பேர் வரை பங்கேற்பார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கவர் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளார். மார்ச் 28 காலை 9 மணிக்கு நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திலிருந்து புறப்படும் அவர், பின்வரும் நேரங்களில் அந்தந்த பகுதிகளில் உரையாற்றுகிறார்:
காலை 10:00 மணி: பெரம்பூர் (எம்.கே.பி நகர்)
மதியம் 01:00 மணி: கொளத்தூர்
மதியம் 02:00 மணி: வில்லிவாக்கம்
மாலை 03:00 மணி: அண்ணா நகர்
மாலை 04:00 மணி: விருகம்பாக்கம்
ஒவ்வொரு இடத்திலும் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், உரிய பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி தவெக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் கடிதம் அளித்துள்ளனர்.