‘கச்சா எண்ணெய் விலை 150 டாலராக அதிகரித்தால் உலகப் பொருளாதாரம் ஆட்டம் காணும்’ - லாரி ஃபிங்க் எச்சரிக்கை
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 150 டாலரை தொடுமானால் அது உலகப் பொருளாதாரத்தில் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிளாக்ராக் தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த வாரம் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 110 டாலரை தாண்டியபோது, உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே வர்த்தகதினத்தில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் ஏப்ரல் மாதம் வரை நீடித்தால், கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 150 டாலரைத் தாண்டும் என்று 'கெப்ளர்' ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
இந்த நிலையில், பிளாக்ராக் முதலீட்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிலாரி ஃபிங்க் கூறியுள்ளதாவது: ஈரான் விவகாரத்தில் அச்சுறுத்தல் நீடித்து, எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தால் அது உலகப் பொருளாதாரத்தில் ஆழமான மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இது ஒரு கடுமையான பொருளாதாரப் பின்னடைவுக்கு வழிவகுக்கும். உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக எரிசக்தி திகழ்கிறது. போக்குவரத்து, தொழிற்சாலை உற்பத்தி மட்டுமின்றி உணவுப் பொருட்களின் விலையையும் கச்சா எண்ணெய் விலையே மறைமுகமாகத் தீர்மானிக்கிறது. எண்ணெய் விலை 150 டாலரை எட்டும்போது, அது ஒரு மிதமான மாற்றமாக இருக்காது; மாறாக அது உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அதிர்ச்சியாக அமையும். பணவீக்க பாதிப்பு எண்ணெய் விலை உயர்வால் எரிபொருட்கள் விலை உடனடியாக அதிகரிக்கும். ADVERTISEMENT
உலகளாவிய வளர்ச்சி பாதிப்பு
* வரலாற்று ரீதியாக, கச்சா எண்ணெய் விலை உச்சத்தைத் தொட்டபோதெல் லாம் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பேரல் விலை 150 டாலர் என்ற நிலையில் விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளைக் குறைக்கும் அல்லது கட்டணத்தை உயர்த்தும்.
* எரிபொருள் விலை உயர்வால் வாகனங்களுக்கான தேவை குறையும்.
*சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் லாப வரம்பு சரியும்.
இவ்வாறு தலைமைச் செயல் அதிகாரி லாரி ஃபிங்க் தெரிவித்துள்ளார்.