இந்தியாவிற்கு எதிராக செயல்பட்ட நபர்... பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி கைது
Shabir Ahmed Lone Arrested: லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
Terrorist Shabbir Ahmed Lone arrested in Delhi: டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் அம்மாநில எல்லையில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒரு நபரை கைது செய்துள்ளனர். ஷபீர் அகமது லோன் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், ஸ்லீப்பர் செல் வலையமைப்பின் ஒரு பகுதியாகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரிகளின் தகவலின் படி, ஷபீர் அகமது தேசவிரோதப் பிரச்சாரங்களைப் பரப்புவதில் ஈடுபட்டு வந்துள்ளார்.
பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தவும், மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிடவும் பல்வேறு இடங்களில் இந்தியாவுக்கு எதிரான மற்றும் ஆபாசமான சுவரொட்டிகளை அவர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. பிப்ரவரி 8-ஆம் தேதி உச்ச நீதிமன்ற மெட்ரோ நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை அளித்த புகாரைத் தொடர்ந்து, இந்த உயர்மட்ட விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜன்பத் உள்ளிட்ட பல இடங்களில் இந்தியாவிற்கு எதிரான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான சுவரொட்டிகள் கண்டெடுக்கப்பட்டது பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல மாநிலங்களில் செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா வலையமைப்பை அதிகாரிகள் கண்டறிந்தனர். பிப்ரவரி மாதம் மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டில் சிறப்புப் பிரிவினர் அதிரடி சோதனைகளை நடத்தினர்.
இதில் போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி இந்தியாவில் வசித்து வந்ததாகக் கூறப்படும் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட சந்தேகத்திற் கிடமான பலர் கைது செய்யப்பட்டனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, ஷபீர் அகமது லோன் வெளிநாட்டிலிருந்து செயல்பட்டு வந்துள்ளார்.
மேலும் அவரே இந்த பயங்கரவாத வலையமைப்பின் முக்கிய நபர் ஆவார். புதிய நபர்களைத் தீவிரவாதப் பாதைக்குத் திருப்புதல், சுவரொட்டிப் பிரச்சாரங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட இடங்களை ரகசியமாக நோட்டமிடுதல் போன்ற பணிகளை அவர் மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஷபீர் அகமது லோனுக்கு நீண்டகாலமாகவே பயங்கரவாதச் செயல்களில் தொடர்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக 2007-ஆம் ஆண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், விடுதலையான பிறகு அவர் தப்பித்து வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். அவர் பயங்கரவாதப் பயிற்சியைப் பெற்றுள்ளதாகவும், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் உயர்மட்டத் தலைவர்களுடன் தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.