காங்கிரஸில் சலசலப்பு: தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர் எம்.பி. - வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் உச்சக்கட்ட குழப்பம்
திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்ததில் இருந்தே காங்கிரஸில் சிக்கல்கள் தொடங்கிவிட்டன. ஸ்கிரீனிங் கமிட்டி பலமுறை கூடி ஆலோசித்தும், முதல் வேட்பாளர் பட்டியலைக் கூட வெளியிட முடியாத அளவுக்குத் தலைவர்களிடையே முரண்பாடுகள் நீடிக்கின்றன.
தமிழக அரசியலில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் அனைத்தும் தொகுதிகளைப் பகிர்ந்து, வேட்பாளர்களை அறிவித்து, வாக்கு சேகரிப்பில் தீவிரமாக இறங்கிவிட்டன.
ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டும் இன்னும் வேட்பாளர் பட்டியலே முடிவாகாத நிலையில், அக்கட்சியின் மூத்த நிர்வாகி மாணிக்கம் தாகூர் எம்பி தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது தேர்தல் பணிகளில் பெரும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது.
பொறுப்பைத் துறந்த மாணிக்கம் தாகூர்
காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான பொறுப்பான 'தேர்தல் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு குழு' தலைவராக மாணிக்கம் தாகூர் செயல்பட்டு வந்தார். கே.சி. வேணுகோபாலால் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட அவர், ப.சிதம்பரம், செல்லகுமார் போன்ற மூத்த தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், திடீரென இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள மாணிக்கம் தாகூர், தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஒரு முக்கிய நிர்வாகி விலகுவது காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் முடிவுக்குப் பின்னணியில் வேட்பாளர் தேர்வில் நிலவும் அதீத குழப்பமே காரணம் என்று அரசியல் வட்டாரங்கள் பேசுகின்றன. திமுகவுடன் தொகுதி உடன்பாடு செய்ததில் இருந்தே காங்கிரஸில் சிக்கல்கள் தொடங்கிவிட்டன. ஸ்கிரீனிங் கமிட்டி பலமுறை கூடி ஆலோசித்தும், முதல் வேட்பாளர் பட்டியலைக் கூட வெளியிட முடியாத அளவுக்குத் தலைவர்களிடையே முரண்பாடுகள் நீடிக்கின்றன.
ஏற்கனவே கரூர் எம்பி ஜோதிமணி, வேட்பாளர் தேர்வு முறையாக நடைபெறவில்லை என்று தனது குமுறலைப் பொதுவெளியிலேயே வெளிப்படுத்தியிருந்தார். இத்தகைய உட்கட்சிப் பூசல்களும், தலைவர்களின் அழுத்தங்களும் மாணிக்கம் தாகூருக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்ததாகத் தெரிகிறது.
ராகுல் காந்திக்கு வைக்கப்பட்ட கோரிக்கை
"மற்ற கட்சிகள் களத்தில் இறங்கிவிட்ட நிலையில், நாம் இன்னும் வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருந்தால் அது தேர்தலைப் பாதிக்கும்" எனத் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர். இதனால் ஏற்படும் தாமதம் கட்சியின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க, ராகுல் காந்தி போன்ற தேசியத் தலைவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் எனத் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். திமுக கூட்டணியில் மற்ற கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்க, காங்கிரஸில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசலும், மாணிக்கம் தாகூரின் ராஜினாமாவும் கூட்டணிக் கட்சியினரிடமும் சற்றுத் தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது