பீகாரில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலி... 10க்கும் மேற்பட்டோர் காயம்!
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கூட்ட நெரிசல்களில் சிக்கி உயிரிழந்தவர்கள் என்று கணக்கெடுத்தால் 300க்கும் மேல் வரும். இதில் முக்கியமானது கோயில் கூட்ட நெரிசல்கள். அந்த வரிசையில் தற்போது மீண்டும் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பீகாரில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் நாலந்தாவில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில், பெண்கள் உட்பட எட்டு பக்தர்கள் உயிரிழந்தனர் மற்றும் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள சீதளா தேவி கோயிலில், சைத்ரா மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை என்பதால் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டிற்காக திரண்டனர். அப்போது ஏற்பட்ட திடீர் நெரிசலில் பக்தர்கள் ஒருவரையொருவர் மிதித்து தள்ளியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.
உயிரிழந்த 8 பெண்களைத் தவிர, காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் இல்லாததே இந்த விபத்துக்குக் காரணம் என நேரில் பார்த்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சமும், முதலமைச்சர் நிதியிலிருந்து மேலும் ரூ.2 லட்சமும் நிதியுதவியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.