குவைத்தில் போர் உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் கொச்சி வந்தன
திருவனந்தபுரம்: குவைத்தில் மேற்காசிய போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்த 20 இந்தியர்களின் உடல்கள் நேற்று அதிகாலையில் கேரளாவில் உள்ள கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன. மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் குவைத்தில் உள்ள ஒரு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மீது ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்த சந்தானசெல்வம் கிருஷ்ணன் (37) என்பவர் உயிரிழந்தார். இவரை தவிர மேலும் 19 இந்தியர்கள் வெவ்வேறு சம்பவங்கள் மற்றும் இயற்கை காரணங்களால் உயிரிழந்தனர். என்றாலும் போர் காரணமாக அவர்களின் உடல்களை தாயகம் கொண்டுவரும் பணி தாமதமானது. இந்நிலையில் குவைத்தில் இறந்த 20 இந்தியர்களின் உடல்களும் சிறப்பு விமானம் மூலம் நேற்று அதிகாலையில் கேரளாவில் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தன. இதையடுத்து அவரவர் சொந்த ஊர்களுக்கு உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் கூறுகையில், “குவைத்தில் இறந்த இந்தியர்களின் உடல்களை விரைவாக தாயகம் கொண்டு வருவதை உறுதிசெய்திட குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது” என்றார். குவைத்தில் ட்ரோன் தாக்குதலில் முதுகுளத்தூரை சேர்ந்த சந்தானசெல்வம் உயிரிழப்புக்கு அங்குள்ள இந்திய தூதரகம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தது.