நிலையான தொடர் முயற்சி நிச்சய வெற்றியைத் தரும்: புதுச்சேரி ஆட்சியர், எஸ்எஸ்பி அறிவுரை
புதுச்சேரி: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து போட்டித் தேர்வர்களுக்கான ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கம்பன் கலையரங்கில் இந்நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அளித்த ஊக்க உரை: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தவன் நான். இளங்கலை விவசாயம் பயின்ற போது, இறுதியாண்டில் யுபிஎஸ்சி படிக்க விருப்பம் ஏற்பட்டது. தொடக்கத்தில் எனது அறிவைப் பெருக்க ‘தி இந்து’ நாளிதழைப் படிக்கத் தொடங்கினேன். அதன்பின் ‘இந்து தமிழ் திசை‘யுடன் தொடர்பு ஏற்பட்டு, தொடர்ந்து வாசிக்கிறேன். நான் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற ஐந்து ஆண்டுகள் ஆனது. விவசாய குடும்பத்தில் பிறந்தவன். குடும்பச் சூழலால் பயிற்சி மையத்தில் படிக்க முடியவில்லை. படித்து முடித்து விட்டு விவசாயத்தில் ஈடுபட்டு, அதில் கிடைத்த பணத்தை வைத்து யுபிஎஸ்சிக்கு தயாராக சென்னை சென்றேன்..
முதல் முறையே யுபிஎஸ்சியை வெல்வது கடினம் என்ற கருத்தும் தவறானது.‘உங்களுக்குள் ஒரு கனவு தூங்க விடாமல் இருக்க வேண்டும்’ என்ற கலாமின் கனவுகளை கடைப்பிடியுங்கள். முழு ஆர்வத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார். கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் - நிர்வாக இயக்குநர் பூமிநாதன் பேசுகையில், “ தொடர் முயற்சி, அயராத உழைப்பு, திட்டமிடல் காரணமாக சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த பலர் இன்று ஆட்சியர்களாக, காவல்துறை உயர் அதிகாரிகளாக உள்ளனர். இங்கு உங்கள் பிள்ளைகளை அழைத்து வந்திருக்கும் பெற்றோர், சரியான நேரத்தில், சரியான பாதையில் அவர்களை இதற்காக தயார்படுத்துங்கள்” என்றார். தொடர்ந்து கிங் மேக்கர்ஸ் கருத்தாளர் ஆதில் பைக் யுபிஎஸ்சி தேர்வுக்கான கருத்துரைகளை வழங்கினார். இந்நிகழ்வை ஒருங்கிணைத்த ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் உதவி பொது மேலாளர் (நிகழ்வு ஒருங்கிணைப்பு மற்றும் விற்பனை பிரிவு) முருகேசன் பேசும்போது, “எனது இருமகள்கள் யுபிஎஸ்சி தேர்வை வெல்ல முக்கியக் காரணம் இந்நிகழ்ச்சியே. 6 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரியில் நடந்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ நிகழ்ச்சியில் அவர்கள் முதலில் பங்கேற்றனர். அன்றைய நிகழ்வு அவர்களுக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக அமைந்து, அவர்களை வெற்றி பெற வைத்தது. எளிமையான குடும்பங்களில் இருந்த பலரையும் உயர் பொறுப்புகளில் யுபிஎஸ்சி அமர்த்தியுள்ளது” என்று தெரிவித்தார்.