தனுஷ்கோடி டூ இலங்கை... புதிய சாதனை படைத்த ஆட்டிசம் குறைபாடு சிறுவர்கள்
தனுஷ்கோடி: இந்தியா மற்றும் இலங்கை இடையே சுமார் 60 கி.மீ தூரத்தை கடலில் நீந்தி ஆட்டிசம் குறைபாடு உள்ள சிறுவர்கள் சாதனை படைத்து உள்ளார்கள். தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து ஆட்டிசம் குறைபாடு உள்ள 4 சிறுவர்கள் தங்களின் நீச்சல் சாதனை பயணத்தை நேற்று மதியம் துவக்கினர்.இந்திய செய்தித்தாள்
இவர்கள் இரவு 12 மணியளவில் இலங்கை தலைமன்னாரை நீந்தி அடைந்த நிலையில், பின்னர் அரைமணி நேரம் ஓய்வுக்கு பின் 12.30 மணியளவில் மீண்டும் தனுஷ்கோடி நோக்கி புறப்பட்டனர். இதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு சாதனை பயணத்தை துவக்கிய இடத்திற்கே நீந்தி வந்த 4 சிறுவர்களும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சிறுவர்களின் உறவினர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர். அதாவது சுமார் 18 மணி நேரத்தில் தனுஷ்கோடி அரிச்சல்முனையிலிருந்து தொடங்கி, தலைமன்னார் சென்று, மீண்டும் தனுஷ்கோடி திரும்பி இருக்கிறார்கள்.
ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் லவ், குஷ், தன்வேஷ், ஸ்ரீஅஸ்வத் ஆகிய 4 சிறுவர்களின் இந்த முயற்சி, பாக் ஜலசந்தியில் முதன்முறையாக ஆட்டிசம் பாதித்த சிறுவர்களால் நிகழ்த்தப்பட்ட மிக பெரிய சாதனையாகும். இந்த சாதனையை நிகழ்தி இருக்கும் 4 சிறுவர்களும் சென்னையில் உள்ள தனியார் அகடமியில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். சாதனையாளர்களான லவ் , குஷ் ஆகியோர் இரட்டையர்கள் ஆவர், மற்றும் இவர்களுக்கு வயது 9 ஆகும். தன்வேஷிற்கு 10 வயது, ஸ்ரீஅஸ்வத்திற்கு 11 வயது ஆகும். முன்னதாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஆட்டிசம் பாதித்த ஜியா ராய் என்ற சிறுமி தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த சாதனைக்காக 4 சிறுவர்களும் மொத்தம் 34 கடல் மைல் தொலைவை நீந்திக் கடக்க 18 மணி 2 நிமிடங்கள் எடுத்து கொண்டனர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டோரும் கடலில் அதிக தூரமும், அதிக நேரமும் நீந்த முடியும் என்பதை இந்த சாதனை மூலம் உணர்த்தி இருக்கிறார்கள்.