வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே: சேப்பாக்கத்தில் இன்று குஜராத் டைட்டன்ஸுடன் மோதல்
சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்த ஆட்டம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது. சிஎஸ்கே அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் களமிறங்குகிறது. சிஎஸ்கே அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே, சிஎஸ்கே அணிக்கு எஞ்சிய அனைத்துப் போட்டிகளும் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மும்பையுடனான போட்டியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி இந்தத் தொடரில் 2-வது சதத்தைப் பதிவு செய்தார். மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையிலும் ஒரு முனையில் நங்கூரம் போல் நின்று சதத்தை விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார் சஞ்சு சாம்சன். எனவே, இன்றைய ஆட்டத்திலும் அவரிடமிருந்து மிகச்சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கலாம்.
அதேநேரத்தில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ருதுராஜ் கெய்க்வாட்டிடமிருந்து எதிர்பார்த்த அதிரடி ஆட்டம் இதுவரை வெளிப்படவில்லை. 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் இதுவரை 104 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
எனவே, இன்றைய ஆட்டத்தில் அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ருதுராஜுக்கு வந்துள்ளது. அதேபோல் சர்ப்ராஸ் கான், ஷிவம் துபே, டெவால்ட் பிரேவிஸ், கார்த்திக் சர்மா, ஜேமி ஓவர்டன் ஆகியோரிடமிருந்து குறிப்பிடத்தக்க ரன்கள் வரும்போது அது சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு உதவக்கூடும்.