Select Location
All Locations
State
Region
City / District
கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி!

கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸின் ராதாகிருஷ்ணன் வெற்றி!

கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். கேரள முதல்வராக காங்கிரஸின் வி.டி. சதீசன் மற்றும் அமைச்சர்கள் கடந்த மே 18 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து, கேரள சட்டப்பேரவைக்கு இடைக்காலத் தலைவராக சுயேச்சை எம்.எல்.ஏ. ஜி. சுதாகர் நியமிக்கப்பட்டு, அவருக்கு ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து, கேரள சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஜி. சுதாகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். ஆளும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி சார்பில் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி சார்பில் பி.பி. கோபகுமார் வேட்பாளராக நிறுத்தினர்.

இதையடுத்து, கேரள சட்டப்பேரவையில் பேரவைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், காங்கிரஸின் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் 101 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக இடைக்கால பேரவைத் தலைவர் சுதாகர் அறிவித்தார். இதையடுத்து, மரபின்படி முதல்வர் வி.டி. சதீசனும், எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனும் சட்டப்பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணனை அழைத்துச் சென்று இருக்கையில் அமரவைத்தனர்.


Dinamani 52 minutes ago
Home Flash News