Select Location
All Locations
State
Region
City / District
/கடுங்குற்றங்களில் ஈடுபட்டால் கடும் தண்டனை; முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், காவல் உயர் அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிலையில், கடுங்குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்,

கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், வழக்கினை விரைவுபடுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும், காவல்துறை, சமூகநலத்துறை மற்றும் அரசு தலைமை வழக்கறிஞருடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் , பாலியல் குற்ற வழக்கினை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தினார்கள். வழக்கினை முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், இ.ஆ.ப., அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) முனைவர் மஹேஷ்வர் தயாள், இ.கா.ப., காவல்துறை கூடுதல் இயக்குநர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) அனிதா ஹூசைன், இ.கா.ப., காவல்துறை தலைவர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப் பிரிவு) சி. ராஜேஸ்வரி, இ.கா.ப., காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) ஆஸ்ரா கர்க், இ.கா.ப., காவல்துறை தலைவர் (சிங்கப்பெண்) கே. பவானீஸ்வரி, இ.கா.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dhina Thanthi 50 minutes ago
Home Flash News