தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு பம்பர் லாட்டரி..! 'டெட்' தேர்ச்சி அவகாசம் 2028 ஆகஸ்ட் வரை அதிரடி நீட்டிப்பு!
தமிழகத்தில் பள்ளிகளில் ஆசிரியராகப் பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி உத்தரவிட்டது. அதில், 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியருக்கு மட்டும் விலக்கு தரப்பட்டது. மற்றவர்கள் 2 ஆண்டுகளில் ‘டெட்’தேர்ச்சி பெற வேண்டும். இல்லையெனில் கட்டாய ஓய்வு வழங்கும்படி தெரிவித்திருந்தது.மாணவர்களின் கல்வித் தரத்தை உறுதி செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 2 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதாவது, ஆகஸ்ட் 31ஆம் தேதி 2027 வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் அதனை 3 ஆண்டுகளாக உயர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற ஆகஸ்ட் 2028ஆம் ஆண்டு வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இதுகுறித்து பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றை விசாரித்த தீபாங்கர் குப்தா தலைமையிலான அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆசிரியர்களின் பணி நலனைப் பாதுகாக்க, ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு 2026ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. 2026ஆம் ஆண்டில் ஜனவரி 2026, ஜூலை 2026, மற்றும் டிசம்பர் 2026 ஆகிய மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளை நடத்த அரசு, டிஆர்பிக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.