கோட்டூர்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் - குண்டுக்கட்டாக கைது..
சென்னை கோட்டூர் புரத்தில் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும் வீடுகள் ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றஞ்சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்ட பின்னரும், தங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என உள்குடியிருப்புவாசிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஏற்கனவே வசித்து வந்த பழைய வீடுகள் மிகவும் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான சூழலில் இருப்பதால், தயாராக உள்ள 195 புதிய வீடுகளை உடனடியாக தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
"எங்க ஃபைல் எங்க சார்? வீடு தரவில்லை என்றால் சொல்லிவிடுங்கள், நாங்கள் மண்ணோடு மண்ணாகப் போய்விடுகிறோம்" எனப் போராட்டக் களத்தில் மக்கள் எழுப்பிய ஆவேசக் குரல்கள் அங்கு நிலவிய சோகத்தையும் தவிப்பையும் வெளிப்படுத்தின. ஏற்கனவே வசித்து வந்தவர்களுக்கே புதிய வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களின் குடும்பங்களுடன் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இந்தத் திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக கிண்டி - கோட்டூர்புரம் சாலையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றபோது, போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியே பெரும் பரபரப்பாகக் காட்சியளித்தது.