எம்.பி.யாகும் பிரவீண் சக்ரவர்த்தி! வேட்புமனு தாக்கல்!
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக காங்கிரஸைச் சேர்ந்த பிரவீண் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சி.வி. சண்முகம் தனது மாநிலங்களவை பதவியை ராஜிநாமா செய்ததை தொடர்ந்து, அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் அதிக எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவு இருப்பவர்தான் வெற்றி பெற முடியும். இந்த சூழலில், தமிழ்நாடு முதல்வரும் தவெக தலைவருமான ஜோசப் விஜய்யை சந்தித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கோரிக்கை வைத்த நிலையில், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸுக்கு வழங்குவதாக அவர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை இடைத்தேர்தலின் தமிழ்நாடு வேட்பாளராக பிரவீண் சக்ரவர்த்தியை காங்கிரஸ் தலைமை நேற்றிரவு அறிவித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலர் சாந்தியை இன்று நேரில் சந்தித்த பிரவீண் சக்ரவர்த்தி, தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதனிடையே, தமிழ்நாடு சமூக நீதி முற்போக்குக் (தவெக + காங்கிரஸ் + விசிக + ஐயூஎம்எல் + இந்திய கம்யூனிஸ்ட் + மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன் என்று பிரவீண் சக்ரவர்த்தி வெளியிட்ட பதிவுக்கு இடதுசாரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் குறிப்பிட்ட கூட்டணியில் தாங்கள் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநிலச் செயலர்கள் அறிவித்துள்ளனர்.