பாஜக-வில் இருந்து அடுத்ததுத்து விலகல்..! பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் விலகல்..!
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ராஜினாமா செய்த பரபரப்பு அடங்குவதற்குள், பா.ஜ.க-வின் முக்கிய முகங்களில் ஒருவரான ஸ்ரீகாந்த் கருணேஷின் இந்த திடீர் விலகல் முடிவு அக்கட்சி வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பா.ஜ.க-வில் நீண்ட நாட்களாகத் தீவிரமாக இயங்கி வந்த ஸ்ரீகாந்த் கருணேஷ், ஊடக விவாதங்களிலும், கட்சியின் கருத்துகளைப் பொதுவெளியில் கொண்டு சேர்ப்பதிலும் முக்கியப் பங்கு வகித்தவர். மேலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது அவரது பேச்சையும் இவர் மொழி பெயர்த்து வந்தார். இந்நிலையில், அவர் தற்பொழுது எடுத்துள்ள இந்த முடிவு பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து நான் விலகுகிறேன். மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் முழுமையாக விலகிக் கொள்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.