Select Location
All Locations
State
Region
City / District
கமாடாவின் கடைசி நிமிட கோல்: நெதர்லாந்து vs ஜப்பான் ஆட்டம் டிரா | FIFA WC 2026

கமாடாவின் கடைசி நிமிட கோல்: நெதர்லாந்து vs ஜப்பான் ஆட்டம் டிரா | FIFA WC 2026

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப்-எஃப் பிரிவில், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதிய பரபரப்பான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆர்லிங்டனில் உள்ள டல்லாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இறுதி நிமிடங்களில் டாய்சி கமடா அடித்த சமநிலை கோல் ஜப்பானுக்கு முக்கியமான புள்ளியைப் பெற்றுத்தந்தது. முதல் பாதி முழுவதும் இரு அணிகளும் கடுமையாகப் போராடி எதிரணி பகுதிகளுக்குள் ஊடுருவ முடிந்து நெருக்கடி கொடுத்தாலும் கோல் ஏதும் போட முடியவில்லை. இதனால் இடைவேளையில் ஆட்டம் 0-0 என்ற நிலையில் இருந்தது. ஆனால், இரண்டாம் பாதி தொடங்கியதும் போட்டி முற்றிலும் வேகமடைந்தது

51-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் அனுபவம் மிக்க நடுக்கள வீரர் வர்ஜில் வான் டைக் தலையால் கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத்தந்தார். ரையன் கிராவென்பெர்க் அளித்த துல்லியமான கிராஸை அவர் கோலாக மாற்றினார். எனினும் பதில் கோல் பதிவு செய்ய ஜப்பான் அதிக நேரம் காத்திருக்கவில்லை. 57-வது நிமிடத்தில் கெய்டோ நகமுரா மத்திய பகுதிக்குள் நகர்ந்து சக்திவாய்ந்த தரை மட்ட ஷாட்டை அடித்து கோலுக்குள் பந்தைச் செலுத்தினார். இதன் மூலம் ஜப்பான் 1-1 என ஆட்டத்தில் சமநிலை பெற்றது.

ஆட்டம் மேலும் விறுவிறுப்படைந்த நிலையில், 64-வது நிமிடத்தில் நெதர்லாந்தின் கிரைசென்சியோ சம்மர்வில் அற்புதமான தனிநபர் திறமையை வெளிப்படுத்தினார். வலப்புறத்திலிருந்து உள்ளே நுழைந்து அடித்த அவரது ஷாட் கம்பத்தில் பட்டு கோலுக்குள் சென்றது. இதனால் நெதர்லாந்து மீண்டும் 2-1 என்ற முன்னிலையைப் பெற்றது. அதன்பின் வெற்றிக்காக ஜப்பான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. அதன் பலன் 88-வது நிமிடத்தில் கிடைத்தது. ஜுன்யா இடோ எடுத்த கார்னர் கிக்கை கோகி ஒகாவா தலையால் கோல் நோக்கி திருப்பியபோது, பந்து கமடாவை லேசாகத் தொட்டு திசை மாறி வலைக்குள் புகுந்தது. இந்த கோல் ஜப்பானை மீண்டும் ஆட்டத்துக்குள் கொண்டு வந்து 2-2 என சமநிலையை உறுதி செய்தது.

இறுதி விசில் ஒலித்தபோது இரு அணிகளும் புள்ளிகளைப் பகிர்ந்தன. நடப்பு உலகக் கோப்பை தொடரின் ‘டார்க் ஹார்ஸ்’ என கருதப்படும் ஜப்பான், வலுவான நெதர்லாந்து அணிக்கு எதிராக பின்னடைவை இருமுறை சமாளித்து போராடிய விதம் அனைவரின் பாராட்டையும் பெற்றது. போட்டிக்குப் பிறகு ஜப்பான் அணியின் முகாமில் மகிழ்ச்சி நிலவிய போதிலும், முழு திருப்தி இல்லை என்று ஜப்பான் தெரிவித்தது. “சமநிலை முடிவில் முழுமையாக திருப்தி இல்லை. ஆனால், நெதர்லாந்து உலகத் தரம் வாய்ந்த அணி. அவர்களுக்கு இணையாகப் போட்டியிட முயன்றோம். பொறுமையுடனும் மன அமைதியுடனும் விளையாடியதன் பலனாக இந்த டிராவைச் செய்ய முடிந்தது,” என்று ஜப்பான் பயிற்சியாளர் தெரிவித்தார். குரூப்-எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் ஜப்பான் அணிகளுடன் ஸ்வீடன், துனிசியா அணிகளும் உள்ளன. அடுத்த போட்டியில் நெதர்லாந்து ஜூன் 20-ஆம் தேதி ஸ்வீடனை எதிர்கொள்ள, ஜப்பான் ஜூன் 21-ஆம் தேதி துனிசியாவை சந்திக்கிறது.


Indian Express Tamil 1 hour ago
Home Flash News