“எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப்படை?” - கும்மிடிபூண்டி பாலியல் வன்கொடுமைக்கு இபிஎஸ் கண்டனம்
சென்னை: ‘எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?. உங்களுடைய 6 மாத ட்ரையல் பீரியட் முடியும் வரை எத்தனை பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?’ என கும்மிடிபூண்டி 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் எங்கே இருக்கிறது பெண்கள் பாதுகாப்பு?என்ன தான் செய்கிறது காவல்துறை? எங்கே போனது சிங்கப்பெண் அதிரடிப் படை?. இதுபோன்று இன்னும் எத்தனை பெண்கள், சிறுமிகள் உங்களுடைய 6 மாத ட்ரையல் பீரியடு (Trial Period) முடியும் வரை பாதுகாப்பை இழந்து, உயிரை இழக்க வேண்டும்?. “அதிகாரிகளை நியமித்துவிட்டேன். இனிமேல் எல்லாம் மாறிவிடும்” என்று டயலாக் பேசிய முதல்வரே… இதுதான் அந்த மாற்றமா? குழந்தை பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியாவது ஷோ காட்டும் அரசியலை நிறுத்திவிட்டு, தீவிரத் தன்மை புரிந்து சட்டம் ஒழுங்கைக் காக்கும் செயல்களில் ஈடுபடுமாறு இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.