மகளிருக்கு இலவச பேருந்து சேவை! கேரள முதல்வர் தொடக்கி வைத்தார்!
கேரளத்தில் மகளிருக்கு இலவச பேருந்து சேவைத் திட்டத்தை அம் மாநில முதல்வர் வி.டி. சதீசன் திங்கள்கிழமை காலை தொடக்கி வைத்தார். கேரள சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாநிலம் முழுவதும் மகளிருக்கு இலவசப் பேருந்து சேவை அளிப்போம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.
இந்த நிலையில், கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் நிலையில், மகளிருக்கு இலவச பேருந்து சேவை திட்டம் (பிரியதர்ஷினி திட்டம்) இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது. எர்ணகுளத்தில் நடைபெற்ற விழாவில் இத்திட்டத்தை கொடியசைத்து முதல்வர் வி.டி. சதீசன் தொடக்கிவைத்தார்.
தொடக்க விழாவில் வி.டி. சதீசன் பேசியதாவது:
இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் சுமார் ரூ. 800 கோடி ரூபாயை அரசு செலவிடுகிறது. கே.எஸ்.ஆர்.டி.சி.யின் வருவாயை அதிகரிப்பதில் அதன் ஊழியர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள். தனியார் பேருந்து உரிமையாளர்கள் சில கவலைகளைத் தெரிவித்திருந்தாலும், அவர்களும் பொதுப் போக்குவரத்து அமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளனர். அரசுப் பேருந்துகள் இயங்காத பல பகுதிகளில் மக்கள் தனியார் பேருந்துகளையே நம்பியுள்ளனர். அவர்களின் பங்களிப்பை மேலும் உறுதி செய்வதற்கான வழிமுறைகளை அரசு அறிமுகப்படுத்தும்.
எந்தவொரு துறையும் வீழ்ச்சியடையக் கூடாது. அதேவேளையில், சிரமங்களை எதிர்கொள்ளும் துறைகளுக்கு ஆதரவளிப்பது அரசின் கடமையாகும். 'பிரியதர்ஷினி' திட்டம் என்பது கேரளப் பெண்களுக்கு அரசு அளிக்கும் மரியாதையின் அடையாளமாகும். சமூகத்தில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான செய்தியாகவும் இது அமைகிறது. குறிப்பிடத்தக்க வகையில், பிரியதர்ஷினி திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தரவில் ஒரு பெண் செயலாளரே கையெழுத்திட்டுள்ளார்” எனத் தெரிவித்தார். கேரள மாநிலப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் மகளிர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.