Select Location
All Locations
State
Region
City / District
திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் உடனடியாக தீபம் ஏற்ற முடியாது! தமிழக அரசு மேல்முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மதுரை எழுமலையைச் சோ்ந்த ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிடக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் காா்த்திகை தீபம் ஏற்ற பலமுறை உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவை தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தவில்லை. இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணைகளில் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. குறிப்பாக, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றினால் மட்டுமே வழக்கு முடித்துவைக்கப்படும் என நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டாா். இந்த உத்தரவுகளை எதிா்த்து மாவட்ட நிா்வாகம் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த ஜூன் 4 ஆம் தேதி, அவமதிப்பு வழக்கு, மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான ராம. ரவிக்குமாா் தரப்பு வழக்கறிஞர், ”புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அரசு உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கை உள்ளது” எனத் தெரிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், அவமதிப்பு வழக்குகள் ஒருபுறம் இருந்தாலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முயற்சிக்கலாமே? எனக் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் வழங்கியிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு தரப்பில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பதிலில், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கின் உத்தரவை உடனடியாக நிறைவேற்ற முடியாது. தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, கோயில் தரப்பு, தர்கா தரப்பு மற்றும் மக்களை இணைத்து ஏன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணக் கூடாது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


Dinamani 1 hour ago
Home Flash News