வேகமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டுமா? வருகிறது புதிய ஐஆர்சிடிசி இணையதளம்!
ரயில் டிக்கெட் முன்பதிவை வேகமாகவும் எளிமையாகவும் மேற்கொள்ள புதிய இணையதளத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தவுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வது சமீப காலங்களில் மிகவும் மோசமான அனுபவமாக உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இளம் பயணிகள் பலரின் குற்றச்சாட்டுகள் மற்றும் கோரிக்கைகளைத் தொடர்ந்து தற்போது புதிய ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகப்படுத்தும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ரயில்வே துறையின் இணையதளமான ஐஆர்சிடிசி தளத்தில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், இதுபோன்ற கோளாறுகள் ஏற்படாத வகையில் புதிய இணையதளம் ஒன்றை இந்திய ரயில்வே வருகிற ஜூன் 15 அன்று அறிமுகப்படுத்தப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரி ஒருவர் பேசுகையில், ”புதுப்பிக்கப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் தொடர்பான பணிகள் சீராக நடைபெற்று வருகின்றது. மேம்படுத்தப்பட்ட அம்சங்கள், பயன்படுத்த எளிமையான வடிவமைப்பு மற்றும் கணிசமான வேகத்தில் டிக்கெட் முன்பதிவு வசதிகளை புதிய இணையதளம் வழங்கும்” என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, புதிய மேம்படுத்தப்பட்ட இணையதளம் ஒரு நிமிடத்திற்குக் குறைந்தது 1.5 லட்சம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகளைக் கையாளும் திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவான சரிபார்ப்பு வசதி கொண்டுள்ளதால் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எளிதாக இருக்கும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.