Select Location
All Locations
State
Region
City / District
கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

கத்தார் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கத்தாரில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “கத்தார் நாட்டில் ராஸ் லஃபான் தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 21.06.2026 அன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில், திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டம், சிதம்பராபுரம் யாக்கோபுரத்தைச் சேர்ந்த பபித் , பணகுடி பகுதி சிவகாமிபுரத்தைச் சேர்ந்த சஜித்குமார் மற்றும் அழகியநம்பியாபுரத்தைச் சேர்ந்த சுவின் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துடனும் கத்தாரில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் க.தென்னரசு இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு அரசின் உதவி எண்கள், இந்தியாவிற்குள் +91 1800 309 3793, வெளிநாட்டு தொடர்புக்கு +91 80 6900 9900, +91 80 6900 9901” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News