கால்பந்து உலகக்கோப்பை தொடரில் வெளியேறிய தென் கொரியா: மன்னிப்புக் கேட்ட அதிபர்!
ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றில் தென் கொரிய அணி வெளியேறியதற்கு அந்நாட்டு அதிபர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ நாடுகள் இணைந்து இந்தாண்டு நடத்துகின்றன. குரூப் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்து 32 அணிகள் நாக் - அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. நாக் - அவுட் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.
குரூப் சுற்றில் வெளியேறிய அணிகளில் தென் கொரியா அணியும் ஒன்று. 2022 உலகக்கோப்பையில் போர்ச்சுகலை தோற்கடித்து நாக்-அவுட் சுற்று வரை முன்னேறிய தென் கொரியா, இந்த முறை குரூப் சுற்றிலேயே வெளியேறியது. தென் கொரிய அணி வெளியேறிதற்கு அந்நாட்டு அதிபர் லீ ஜே மியுங் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தென்கொரிய அணியை திறமையற்றவர்கள் என விமர்சித்த அவர் தோல்விக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோல்வி குறித்து தென் கொரிய அதிபர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “திறமையை விட விசுவாசத்திற்கும் குழு வாதத்திற்கும் மதிப்பு கொடுத்து, திறமையற்றவர்களை தலைமைப் பதவிகளில் நியமித்தால், அதற்கான விளைவு ஏறக்குறைய தவிர்க்க முடியாமல் இவ்வாறாக அமைகிறது.
ஏற்றுக்கொள்ளமுடியாத இந்தத் தோல்விக்காக, ஏமாற்றமடைந்த நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கு, விளையாட்டுத் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார். சோன் ஹியுங்-மின், கிம் மின்-ஜே மற்றும் லீ காங்-இன் போன்ற முன்னணி நட்சத்திர வீரர்கள் இருந்தபோதும் தென் கொரியா அணி 'ஏ' பிரிவில் 3வது இடத்தைப் பிடித்து நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. செக் குடியரசுடன் மோதிய முதல் போட்டியில் வென்ற தென் கொரிய அணி அடுத்த போட்டிகளில் மெக்ஸிகோ, தென் ஆப்ரிக்க அணிகளுடன் தோல்வியைத் தழுவியது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து அந்த அணியின் கேப்டன் சோன் ஹியுங்-மின் ஓய்வு பெறுவார் எனக் கூறப்படுகிறது. அதேபோல, தென் கொரியாவின் தோல்வி மக்களிடையே அதிருப்தியை உண்டாக்கிய நிலையில் அந்த அணியின் பயிற்சியாளர் ஹாங் மியுங்-போ பணிநீக்கம் செய்யப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.