மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் ஓடிடி உரிமம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவியை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்குகிறார். இப்படம் சென்னையைப் பின்னணியாக வைத்து உருவாகலாம் எனத் தெரிகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்தில் சென்னை, பாண்டிச்சேரியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தத் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ரூ. 20 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், சாட்டிலைட் மற்றும் இசை உரிமங்கள் ரூ. 25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம். இதனால், வெளியீட்டுக்கு முன்பே ரூ. 45 கோடி வரை இப்படம் வணிகம் செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது, நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்னாத் இயக்கத்தில் ஸ்லம்டாக் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். சாய் பல்லவி ராமாயணா படத்தில் நடித்து வருகிறார்.