மும்பை கனமழை! கொரானாவுக்குப் பின் முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து! மிக அரிய நிகழ்வு
மும்பையின் நாடித்துடிப்பாக இருந்துவரும் டப்பாவாலா சேவை, அங்கு பெய்துவரும் கனமழை காரணமாக இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2005 கனமழை, கரோனா காலத்துக்குப் பிறகு, மும்பையில் டப்பாவாலா சேவை முதல்முறையாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை நகரின் மக்களின் நாடித்துடிப்பாக இருக்கும் இந்த சேவை இன்று ரத்து செய்யப்படுவது மிகவும் அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
ரயில்கள், சைக்கிள்கள், நடந்து சென்று என ஆயிரக்கணக்கான டப்பாவாலாக்கள், கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாலும், சாலைப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியிருப்பதாலும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. உலகிலேயே மிகவும் துல்லியமாக, ஆயிரக்கணக்கானோரின் ஒருங்கிணைப்புடன் விரைவாக நடைபெறும் இந்த டப்பாவாலா சேவை திங்களன்று ரத்து செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்ற நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 136 ஆண்டுகளாக, வீடுகளில் சமைத்த உணவுகளை டப்பாக்களில் போட்டு அதனை வீட்டிலிருந்து பெற்று, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியை சுமார் 3000 டப்பாவாலாக்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் மூலமாக நாள்தோறும் கிட்டத்தட்ட 50 ஆயிரம் உணவுகள் உரியவர்களுக்குக் கிடைத்து வருகிறது.
இதுவரை ஒரு தவறுகூட நடைபெறாத, இடைநின்றதே இல்லாத இந்த டப்பாவாலா சேவைக்கு உலக அளவில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. மும்பை முழுவதும் தண்ணீர் சூழ்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால், ஆயிரக்கணக்கான டப்பாவாலாக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், பெரும்பாலானோர் சைக்கிள்களை நம்பியிருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டப்பாவாலா சேவை நிறுத்தப்பட்டிருப்பதால், அலுவலகம் சென்றிருப்போர், தங்களது மதிய உணவுக்கு மாற்றுவழிகளைத்தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் இந்த சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.