பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் குகை கோயில் பனிலிங்கம் உருகியது
ஜம்மு: பருவநிலை மாற்றம் காரணமாக அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி உள்ளது. இமய மலையில் 3,888 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகைக் கோயில் அமைந்துள்ளது. அங்கு இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அமர்நாத் குகை கோயிலில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மே 23-ம் தேதி பிஎஸ்எப் வெளியிட்ட புகைப்படத்தில் 7 அடி உயரத்துக்கு பனிலிங்கம் காட்சியளித்தது.
அப்போது முதலே பனிலிங்கம் உருகத் தொடங்கியது. புனித யாத்திரையின் தொடக்க நாளில் சுமார் 5 அடி உயரத்தில் பனிலிங்கம் காட்சியளித்தது. ஆனால் ஒரு வாரத்துக்குள் சுமார் 90 சதவீதம் வரை பனிலிங்கம் உருகி உள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது: கடந்த 2004, 2006, 2007, 2016 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பனிலிங்கம் உருகி உள்ளது. ஆனால் நடப்பாண்டில் வழக்கத்தைவிட அதிவேகமாக பனிலிங்கம் உருகியிருக்கிறது. இதற்கு பருவநிலை மாற்றமே முக்கிய காரணம் ஆகும். அமர்நாத் குகைக்கோயில் பகுதியில் வெப்ப நிலை உயர்ந்திருக்கிறது. ஒரு வாரத்துக்குள் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனிலிங்கத்தை வழிபட்டு உள்ளனர். அதிக பக்தர்கள் குகைக்கோயிலுக்குள் செல்லும் போது வெப்பம் அதிகரிக்கிறது. குகையின் மேற்பரப்பில் இருந்து நீர்த்துளிகள் வடிந்து பனிலிங்கமாக மாறுவது வழக்கம்.
தற்போது நீர்த்துளிகளின் அளவு குறைந்து, வெப்பமும் அதிகரித்து உள்ளது. இதனால் பனிலிங்கத்தின் உயரம், அகலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. குகைக்குள் வெப்ப காற்று நுழைவதால் பனிலிங்கம் உருகுகிறது. இவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பனிலிங்கம் வேகமாக உருகி உள்ளது. இவ்வாறு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்ஜிதா முப்தி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மரங்களை வெட்டுவது, சட்டவிரோத சுரங்கங்கள், மலைப் பகுதிகளில் குப்பைகள் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் பனிலிங்கம் உருகி உள்ளது. மலைகள், நதிகள், பனிச்சிகரங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருரின் கடமை” என்று தெரிவித்துள்ளார்.