Select Location
All Locations
State
Region
City / District
கோவை வேளாண் கண்காட்சியில் விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்ப கருவிகள்!

கோவை வேளாண் கண்காட்சியில் விவசாயிகளை வியப்பில் ஆழ்த்தும் தொழில்நுட்ப கருவிகள்!

கோவை: கோவை கொடிசியா வளாகத்தில் வேளாண் கண்காட்சி (அக்ரி இன்டெக்ஸ்) நடந்து வருகிறது. வரும் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் விவசாயிகளுக்கு மட்டுமின்றி, பார்வையாளர்களுக்கும் வியப்பை தரும்வகையில் பல்வேறு அரங்குகள், நவீன கருவிகள் இடம்பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் பரந்து விரிந்திருக்கும் உழவுத் தொழில் சார்ந்த அத்தனை தொழில் நுட்பங்களும் மொத்தமாக ஒற்றைக்குடையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. வேளாண்மைக்கு உழைப்பு முதுகெலும்பாக இருந்தாலும், உழைப்பை கடந்த தொழில்நுட்பமும் விவசாயிகளுக்கு தோள் கொடுக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பஞ்சாப், லூதியானா என பலரும் பிரமாண்ட ட்ரோன்கள் முதல் ஏ.ஐ. தொழில்நுட்ப கருவிகள் வரை கொண்டு வந்து வைத்துள்ளனர்.

பயிர்களின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் தேவையான பல ரக குருணை உரங்களில் ஆரம்பித்து நீர் மேலாண்மையை வெளிப்படுத்தும் செல்போன் கொண்டு இயக்கப்படும் சொட்டுநீர் பாசனம், சோலார் தகடுகள், அதிகம் மற்றும் குறைந்த நீர் வெளியேற்றும் திறன் கொண்ட பம்பு செட்டுகள், நாட்டு விதைகள், நாட்டு காய்கறிகள், பழக்கன்றுகள், மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புக்கு தேவையான தேனீ பெட்டிகள் என அனைத்து விதமான மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

மரங்கள், கிளைகள் வெட்டுவதற்கு தேவையான பல ரகங்களை கொண்ட கத்திரிகள், இயற்கை உரங்கள், கால்நடை வளர்ப்பு, நர்சரி, வேளாண் உற்பத்தி சாதனங்கள், உணவுப்பொருள் தயாரிக்கும் இயந் திரங்கள், கோழிப்பண்ணை உபகரணங்கள், பசுங்குடில்கள் அமைக்க தேவையான உபகரணங்கள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதனை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

குறிப்பாக, செடிகள் வளர்க்க தேங்காய் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட சின்னஞ்சிறிய தொட்டிகள், வட இந்திய நாட்டு மாடுகள், விழுப்புரம் ஆட்டுப்பண்ணையின் ஆடு வளர்ப்பு முறை, தென்னாப்பிரிக்காவின் போயர் ரக ஆடு ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை குழந்தைகள், பெண்கள் அதிகளவில் பார்வையிட்டனர். இறைச்சி நுகர்வுக்காக வளர்க்கப்படும் இந்த ஆடானது, ஓராண்டில் 60 முதல் 70 கிலோ எடையை எட்டுகிறது. 4 வயதில் 150 கிலோ எடையை எட்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நிறுவனங்கள் விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்பங்களை காட்சிப் படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: செல்போன் செயலி போல் விவசாயமும் தொழில் நுட்பங்களால் வளர்ந்துள்ளது. பலரும் நாட்டு விதைகளை விரும்பி வாங்கிச் செல்வதையும், மரக்கன்றுகள் வளர்க்க வாங்கிச் செல்வதையும் பார்க்கிறோம். அதேபோல் விவசாயிகள் தங்களுக்கு தேவையான அதிநவீன இயந்திரங்கள் முதல் பல்வேறு தொழில்நுட்ப கருவிகளை வாங்கி செல்கின்றனர்.

இயற்கை விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையையும், விவசாயத்தின் அருமையையும், விவசாயிகளின் உழப்பையும் பலரும் அறிந்து கொள்ள இந்த கண்காட்சி வாய்ப்பாக உள்ளது” என்றனர்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News