Select Location
All Locations
State
Region
City / District
பொள்ளாச்சியில் முதல் மாநாடு: அண்ணாமலை நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்

பொள்ளாச்சியில் முதல் மாநாடு: அண்ணாமலை நாளை முக்கிய அறிவிப்புகளை வெளியிட திட்டம்

தமிழக பாரதிய ஜனதா முன்னாள் தலைவராக பதவி வகித்த அண்ணாமலை, அந்த கட்சியில் இருந்து விலகி வீ த லீடர்ஸ் என்ற புதிய அரசியல் அமைப்பை தொடங்கி உள்ளார். அண்ணாமலையின் இந்த கட்சியில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர். இந்த கட்சியின் முதல் மாநாடு பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நாளை (12-ந் தேதி) நடக்கிறது. போதை இல்லா பொள்ளாச்சி என்னும் பெயரில் இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

மாநாட்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என அண்ணாமலை தரப்பினர் கருதுகிறார்கள். அதற்கேற்ப மாநாடு பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநாடு முகப்புதோற்றம் வித்தியாசமாக இருபுறமும் தென்னை மரம், நடுவில் அணையின் தோற்றத்தை போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியின் முக்கிய நீராதாரமான பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தை மையப்படுத்தியும், முக்கிய விவசாயமான தென்னை தொழிலை மையப்படுத்தியும் முகப்பு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

நாளை மாலையில் தொடங்கும் இந்த மாநாட்டில் அண்ணாமலை பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. கட்சியின் எதிர்காலம், நடைபெற உள்ள இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பாகவும் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.

முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் அந்த கட்சியின் செயல்பாடுகளை அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தநிலையில் தற்போது ஆட்சி மாறியுள்ளது. தற்போதைய த.வெ.க. அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகள் குறித்தும், கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டது குறித்தும் நாளை பொள்ளாச்சியில் விரிவாக பேச உள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதனால் அரசியல் தொடர்பாக அவர் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.


Malaimalar 1 hour ago
Home Flash News