Select Location
All Locations
State
Region
City / District
“காமராஜர் வழியில் வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்” - முதல்வர் விஜய்

“காமராஜர் வழியில் வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்” - முதல்வர் விஜய்

சென்னை: “எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம்.” என அவரது 124-வது பிறந்தநாளை ஒட்டி தமிழக முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்.

கல்விச்சாலைகள் மட்டுமின்றி, நீர்த்தேக்கங்களையும், முக்கிய தொழிற்சாலைகளையும் உருவாக்கி, விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்திய மகத்தான தலைவர்.

எளிமை, நேர்மை, தியாகம், தொலைநோக்குப் பார்வை, மக்கள் சேவை போன்ற உயரிய பண்புகளால் இந்திய அரசியலில் தனி முத்திரைப் பதித்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் நலனுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜரின் அடிச்சுவட்டில் நாமும் பயணித்து வளமான தமிழகத்தை உருவாக்க உறுதியேற்போம். கர்மவீரர் காமராஜரின் புகழ் ஓங்குக.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சென்னை அண்ணா சாலையில் பல்லவன் இல்லம் முன் வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் புடைசூழ மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News