உக்ரைன் போரில் அணு ஆயுதத் தாக்குதலை தடுத்த பிரதமர் மோடி: போலந்து அமைச்சர் பாராட்டு
டெல்லி: உக்ரைன் போரின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை தடுத்த பெருமை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையே சேரும் என போலந்து நாட்டு அமைச்சர் ஒருவர் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்று பேசிய போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் விளாடிஸ்லாவ் பார்டோஷெவ்ஸ்கி (Władysław Bartoszewski), இந்திய பிரதமர் மோடி உலகளவில் மிகவும் பிரபலமான, மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த அரசியல்வாதி ஆவார். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் நீண்டகால சிறப்பான உறவு உள்ளது என்று குறிப்பிட்டார்
பிரதமர் மோடி தன்னிடம் கூறுவதை, ரஷ்ய அதிபர் புடின் உண்மையில் மிகுந்த கவனத்தில் கொள்கிறார். குறிப்பாக ரஷ்யா-உக்ரைன் போரின் ஒரு நெருக்கடியான தருணத்தில் பிரதமர் மோடி நான் கூறுமளவிற்கான செல்வாக்கை நிரூபித்திருக்கிறார். எப்படி என்றால் ஒரு கட்டத்தில் (2022-ல்) உக்ரைன் மீது ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டது. ஆனால் ரஷ்ய அதிபரிடம் அணுகுண்டு தாக்குதலை நிகழ்த்த வேண்டாம் என பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி என விளாடிஸ்லாவ் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதன் மூலம் உலகத் தலைவர்களில் பிரதமர் மோடியின் வார்த்தைகளுக்கு மட்டுமே புதின் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றும், மாஸ்கோவின் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்த கூடிய சில உலகத் தலைவர்களில் மோடியும் ஒருவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.