தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவை முன்பாக சத்தியாகிரக போராட்டம் நடத்தப்படும் என கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார் மேக்கேதாட்டு அணை திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தியும், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கர்நாடகத்தில் விரைவில் 'கர்நாடக பந்த்' (முழு அடைப்பு போராட்டம்) நடத்தப்படும் என்று கன்னட கூட்டமைப்பு மற்றும் கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
கர்நாடக - தமிழக எல்லைப் பகுதியான அத்திப்பள்ளியில் கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ், சாரா கோவிந்த், கே.ஆர். குமார், மஞ்சுநாத் தேவ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடிநீர் திட்டத்துக்கு தமிழகம் முட்டுக்கட்டை: கன்னட அமைப்புகள் குற்றச்சாட்டு
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய கன்னட கூட்டமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் கூறியதாவது:
"மேக்கேதாட்டு அணைத் திட்டம் என்பது விவசாயத்துக்கான திட்டம் அல்ல, அது பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான திட்டம். இத்திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஏற்கனவே போதிய பருவமழை இல்லாததால் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி உள்ளிட்ட கர்நாடகத்தின் முக்கிய அணைகளில் தண்ணீர் இல்லை. இத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வற்புறுத்துவது கன்னடகர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வலியுறுத்தியுள்ளது" என்றார்.
தமிழக சட்டப்பேரவை முன்பு போராட்டம் நடத்துவோம்!
தொடர்ந்து பேசிய அவர்கள், தமிழக ஊடகங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் சில இந்த விவகாரத்தில் தவறான தகவல்களைப் பரப்புவதாகவும், கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் எப்போதும் வன்முறையற்றவை என்றும் கூறினர். மேலும், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல், கர்நாடக முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினர். இல்லையெனில், கன்னட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் தமிழகத்துக்கு நேரில் வந்து, தமிழக சட்டப்பேரவை முன்பாக மாபெரும் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்துவோம் என்றும் எச்சரித்தனர்.
இரு மாநில அரசுகளுக்கும் எதிர்ப்பு
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மட்டுமன்றி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார் ஆகிய இருவர் மீதுமே கன்னட அமைப்புகள் அதிருப்தியை வெளிப்படுத்தின. ஆட்சியில் இல்லாதபோது மேக்கேதாட்டு திட்டத்துக்காக பாதயாத்திரை நடத்திய டி.கே. சிவக்குமார், தற்போது அதிகாரத்தில் இருந்தும் திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சாடினர்.
பல்வேறு கோரிக்கைகளுடன் முழு அடைப்பு
மேக்கேதாட்டு திட்டம் மட்டுமன்றி, மகாதாயி திட்டம், கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, கன்னடப் பள்ளிகளுக்கு கூடுதல் நிதி மற்றும் இந்தி திணிப்பு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த 'கர்நாடக பந்த்' நடத்தப்படவுள்ளது. இன்னும் சில நாள்களில் இதற்கான அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் என்றும், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் இந்த போராட்டம் திட்டமிடப்படும் என்றும் கன்னட கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கன்னட அமைப்புகளின் இந்த எல்லையோர ஆர்ப்பாட்டம் மற்றும் பந்த் அறிவிப்பால் தமிழக - கர்நாடக எல்லைப் பகுதியில் பரபரப்பும், பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.