தர்மேந்திர பிரதான் ராஜிநாமா தொடக்கப்புள்ளி மட்டுமே! காந்தி நினைவிடத்தில் சோனம் வாங்சுக் பேச்சு
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா என்பது தொடக்கப்புள்ளி மட்டுமே என சோனம் வாங்சுக் திங்கள்கிழமை (ஜூலை 27) தெரிவித்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தப் போராட்டக் களத்தில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தில்லி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், தனது உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்த சோனம் வாங்சுக் 26 வது நாளில் அதனை முடித்துக் கொண்டார். இதையடுத்து, மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, சிஜேபி தனது போராட்டத்தை திரும்பப் பெற்றது. இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனம் வாங்சுக் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் சோனம் வாங்சுக் பேசியதாவது:
இந்த ராஜிநாமா அர்த்தமுள்ளதாக மாறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அப்படி மாறவில்லையென்றால், இந்த ராஜிநாமா முக்கியத்துவமற்றதாக அமையும். இது தொடக்கப்புள்ளி மட்டுமே. நமது நாட்டின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இதனால் நாடு மேலும் மேம்படும். இதற்கான செயல்முறை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன். இதுதொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர மரியாதையால் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டால் மிகவும் சிறப்பானதாக அமையும் என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்