அடுத்த ஆண்டுக்குள் 8000 ஊழியர்களை நீக்கும் BMW நிறுவனம்
ஜெர்மனியின் வாகன உற்பத்தித் துறை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. மின்சார வாகனங்களுக்கான அதிக செலவு, சீனா உடனான கடுமையான போட்டி மற்றும் அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு ஆகியவற்றால் வாகன உற்பத்தித்துறை நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக பிரபல முன்னணி கார் நிறுவனங்களான வோக்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே ஊழியர்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன. முனீச் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் உலகம் முழுவதும் சுமார் 1,50,000 பேர் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், ஜெர்மனியில் உள்ள பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனம், 2027-ம் ஆண்டுக்குள் சுமார் 8,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளோம் என அறிவித்துள்ளது. சீனாவில் கடும் போட்டி நிலவுவதாலும், மந்தமான பொருளாதார சூழலாலும் இந்த முடிவை எடுத்துள்ளோம் என அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிறுவனத்திற்கும் தொழிலாளர் நலச்சங்கத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சி-மேம்பாட்டுப் பிரிவுகளை இலக்காகக் கொண்டு இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உற்பத்திப் பிரிவுக்கு மட்டும் இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்