பாஜகவில் இணையுமாறு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனை
பாஜகவில் இணையுமாறு தனது மகனுக்கு மிரட்டல்கள் வருவதாக அபிஜீத் தீப்கேவின் தாயார் அனிதா தீப்கே இன்று (ஜூலை 30) தெரிவித்தார். பாஜகவில் இணைய மகனுக்கு அறிவுறுத்துமாறும், இல்லையென்றால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டல் விடியோக்கள் வருவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது வசித்துவரும் மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சாம்பாஜி நகரில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறும் பலர் கூறுவதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக உள்ளூர் மராத்தி செய்தி நிறுவனத்துக்கு அனிதா தீப்கே பேட்டி அளித்துள்ளதாவது: ''அரசியல் கட்சியைத் தொடங்கியதில் இருந்தே என் மகன் அபிஜீத் தீப்கேவுக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஆரம்பத்தில் இது குறித்து எங்களிடம் பகிர்ந்துகொண்டதில்லை. ஆனால், கட்சியில் இணையவில்லை என்றால், பெற்றோர்கள் குறிவைக்கப்படுவார்கள் என்ற மிரட்டல் வந்த பிறகே எங்களிடம் இது குறித்து என் மகன் கூறினார்.
மிரட்டல்களுக்கு அவர் அஞ்சவில்லை. ஆனால், இதுபோன்ற சூழல்களை நாங்கள் இதற்கு முன்பு கையாண்டதில்லை என்பதற்காகவே வருந்தினார். வீட்டில் இருந்து வேறு எங்காவது பாதுகாப்பாக தங்கியிருக்குமாறு எங்களிடம் பேசினார்'' என மகன் பேசியதை அனிதா குறிப்பிட்டார். இதற்கடுத்து 16 நாள்களுக்கு அவர்கள் மகாரஷ்டிரத்தின் கடற்கரைப் பகுதியான கொங்கனில் தங்கியிருந்தனர். அபிஜீத் தீப்கேவின் தந்தை பகவான் தீப்கே, குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது மிகவும் கவலை அடைந்ததாக அனிதா சுட்டிக்காட்டினார்.