பவானிசாகர் அணையில் இருந்து 15ம் தேதி கீழ்பவானி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா?... விவசாயிகள் எதிர்பார்ப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை ஈரோடு, கரூர், திருப்பூர் ஆகிய மூன்று மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்படுகிறது. இந்த நீர் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.07 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ம் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை நம்பி கரும்பு தென்னை சாகுபடிகள் செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு பவானிசாகர் அணையில் போதிய நீர் இல்லாததன் காரணமாக குறிப்பிட்டபடி வரும் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனென்றால், நேற்று காலை 8 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 58 அடி மட்டுமே உள்ளது. 105 அடி அடி கொண்ட பவானிசாகர் அணையின் முழு நீர்த்தேக்க பரப்பு 30 சதுர மைல் ஆகும். கடந்த சில மாதங்களாகவே அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு அதிக அளவில் திறந்து விடப்பட்டு வருவதால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது. தற்போது கேரளாவில் பருவமழை பெய்து வருகிறது. பில்லூர் அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளது. அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது. இதனால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 57.91 அடியாக உள்ளது.