தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தனித் தீர்மானம் கொண்டுவந்த முதல்வர் விஜய் பேசியது என்ன?
சென்னை: அரசு நிறுவனங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், “மொழி எப்போதும் தொடர்புக்கான ஒன்றே. அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் உள்ள எல்லா மொழிக்கும் இது பொருந்தும், அதையும் மறுக்க முடியாது. ஆனால் தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல. பேசினால் வரும் ஓசை மட்டுமல்ல. தமிழ் நமது உயிர். நமது உணர்வு. நம்மை பெற்ற தாயை அம்மா என்று சொல்லும்போது பாசம், சொந்தமும் நம்மை அறியாமலே நமக்குள் உயிராக, உணர்வாக தோன்றுவதுபோல, தமிழும் எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. தாய் எப்படி மிகப்பெரிய புனிதமோ அதுபோல தான் தாய் மொழியும்.
நம் தாய் நமக்கு மிகப் பெரிய புனிதம் என்றால் நம் எல்லாருக்குமான தமிழ்த்தாய் பற்றி சொல்லவா வேண்டும். தாயை போற்றுகிற வாழ்த்துகிற தமிழ்த்தாய் வாழ்த்தை எப்படி விட முடியும், விடவும் மாட்டோம். நமது தமிழ்த்தாய் வாழ்த்து 1891-ல் எழுதிய மனோன்மணியம் சுந்தரனார் நம் தமிழ் மொழியை தமிழ்த்தாய் என்று உயர்வாக பாடினார். இந்திய துணை கண்டதை இந்திய ஒன்றியதை அழகிய முகமாக கூறிய மனோன்மணியம் சுந்தரனார், அந்த முகத்தோட நெற்றியில் வைக்கிற திலகம் தான் தமிழ்நாடு என்றார். இந்தியாவின் நெற்றியில் இருக்குற போட்டு மாதிரி, ஒரு வெற்றி பொட்டு தான் தமிழ்நாடு. அதன் நறுமணம் உலகம் முழுவதும் பரவுவதுபோல, தமிழின் புகழும் உலகம் முழுக்க பரவ வேண்டும் என்றார்.
இன்று உலகில் தமிழ் பேசும் மக்கள் இல்லாத நாடுகளே குறைவுதான். தமிழும், தமிழனும் இல்லாத நாடு இல்லை. தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல அது ஒரு பண்பாடு. அது ஒரு சிந்தனை, அது ஒரு அன்பு. தமிழ் என்றால் விருந்தொம்பல். சுருக்கமாக சொன்னால், தமிழ் என்றால் கெத்து. தமிழ் என்றால் பவர். அந்த தமிழோட புகழை கூறும் தமிழ்த்தாய் வாழ்த்தில் அனைத்துலகும் இன்பமுற என்று சொல்லி உலகத்தையே நம் தமிழ் உயர்த்தி பிடிக்கிறது. தமிழ்த்தாய் வாழ்த்து எந்த மொழி, மதம், இனத்தையும், எந்த தனி மனிதனையும் தாழ்த்தி பேசவில்லை. கொஞ்சமும் காயப்படுத்தவில்லை. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பெயர் இருக்கும். ஒரு கூட்டத்தில் தமிழ் என்று அழைத்தாம் நாம் ஒட்டுமொத்தமாக திரும்பிப் பார்ப்போம். தமிழ் என்ற சொல்லே, பெயரே மிகப்பெரிய வரலாறு. ஒரு கட்சிக்கு பிரச்சினை என்றால், சம்மந்தப்பட்ட அந்தக் கட்சி மட்டுமே போராடும். ஆனால், தமிழுக்கு பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் முன்னே வந்து நிற்கும்.