நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது எப்படி?
சீன, நேபாள எல்லையில் இமயமலையின் லாங்டாங் லிருங் சிகரம் அமைந்துள்ளது. சுமார் 8,000 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த சிகரத்தில் பனிப்பாறைகள் உடைந்தன. இதனால் சிகரத்துக்கு உள்ளேயே மிகப்பெரிய ஏரி உருவாகி இருந்தது. இந்த சூழலில் லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து ஏரியில் விழுந்தது. இதன் காரணமாக ஏரி உடைந்து திபெத் பகுதியின் போய்கு நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுபோன்ற பெருவெள்ளம், பனிமலை ஏரி வெடிப்பு வெள்ளம் (ஜிஎல்ஒஎப்) என்றழைக்கப்படுகிறது.
திபெத்தின் போய்கு நதி நேபாளத்தில் போடே கோசி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. திபெத்தில் இருந்து சீறிப் பாய்ந்த வெள்ளம் நேபாளத்தின் போடேகோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கடந்த புதன்கிழமை காலை நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் மாவட்டங்கள் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கின. இரு மாவட்டங்களில் உள்ள 13 நீர் மின் நிலையங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் நேபாளத்தின் நேத்ராவதி - ரசுவாகதி இடையிலான 42 கி.மீ. நீள சாலை, சியோப்ருபேசியில் உள்ள 16 கி.மீ. நீள சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 6 மணி நேரத்துக்கும் மேலாக நேபாள நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்ததால் பேரழிவு ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து அமெரிக்க அரசின் புவியியல் ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இமயமலைப் பகுதியில் 4.4 ரிக்டர் அலகில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பனிமலைகள் உடைந்து நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக கருதப்பட்டது. ஆனால் தீவிர ஆய்வில் அங்கு நிலநடுக்கம் ஏற்படவில்லை.