பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த ஹீரோக்கள்! ராகவ், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன்!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் சினிமா நடிகர்கள் ராகவ், குமரன் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்துள்ளனர். நஞ்சுபுரம் படத்தில் நாயகனாக நடித்தவர் ராகவ். குமாரசம்பவம் படத்தில் நாயகனாக நடித்தவர் குமரன். இப்படங்களில் பெரிதாக அங்கீகாரம் கிடைக்காததால், தற்போது இருவருமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று (செப். 6) தொடங்கியது. விஜய் சேதுபதி மீண்டும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் போட்டியாளர்கள் நேரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. பிக் பாஸ் சீசன் 10-ல் புதுமையை வெளிக்காட்டும் விதமாக மூன்று போட்டியாளர்கள் அழைக்கப்பட்டு அவர்கள் மூவருக்கும் மக்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அரங்கத்தில் இருக்கும் மக்கள் மூவருக்கும் வாக்களிப்பார்கள். இதில் அதிக வாக்குகள் பெற்ற இருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது, மற்ற சீசன்களில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், இம்முறை புதுமையாக, போட்டியாளர்கள் உள்ளே செல்வதற்கே மக்கள் வாக்களிக்கும் வகையில் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மகாநதி தொடர் நாயகி லஷ்மி பிரியா, சாதிகா, ஜெர்மனி மாணவர் பிருத்விநாத், கார்ப்பரேட் ஊழியர் ஜாவித் ஆகியோர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து நடிகர் ராகவ், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன், வித்யா நம்பர் ஒன் தொடரின் நாயகன் புவியரசு ஆகியோர் பிக் பாஸ் மேடையில் தோன்றினர். இவர்கள் மூவருக்கும் அரங்கத்தில் இருந்த மக்கள் வாக்களித்தனர். இதில் அதிக வாக்குகளைப் பெற்று ராகவ், குமரன் ஆகியோர் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். குறைந்த வாக்குகளைப் பெற்ற புவியரசு வெளியேற்றப்பட்டார்.