அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரைபகினா
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் எலெனா ரைபகினா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 12-வது நாளான நேற்று முன்தினம் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினா, 4-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோ கோ காஃபுடன் மோதினார். இதில் முதல் செட்டை 3-6 என இழந்த ரைபகினா அடுத்த 2 செட்களிலும் பதிலடி கொடுத்து 6-4, 6-4 என கைப்பற்றினார். முடிவில் 2 மணி நேரம் 9 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரைபகினா 3-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரை இறுதியில் முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான பெலாரஸின் அரினா சபலென்கா, 3-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அரினா சபலென்கா 7-5, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் கால்பதித்தார். இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அரினா சபலென்கா, எலெனா ரைபகினாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் ஜூனியர் பிரிவில் மகளிர் இரட்டையர் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, உக்ரைனின் அன்டோனியா சுஷ்கோவா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் ஃபெலிட்சாட்டா டோரோஃபீவா ரைபாஸ், அனா புஷ்கரேவா ஜோடியை வீழ்த்தி அரை இறுதி சுற்றில் கால்பதித்தது.