கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளை அனுமதிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: கோயில்களை வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், கோயில் திருவிழாக்களில் சிறு வியாபாரிகளையும், உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா வரும் மார்ச் 11-ம் தேதி முதல் மார்ச் 13-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு முறையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவும், தற்காலிக கடைகளை முறைப்படுத்த கோரியும் சேலத்தை சேர்ந்த இராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
மேலும், ‘ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவதால் பாதுகாப்புக்காக போதுமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். கோயில் திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைக்க டெண்டர் கோரப்பட்ட நிலையில், அதில் ஒருவர் மட்டும் டெண்டர் கேட்டதால் மீண்டும் புதிதாக டெண்டர் விட இருக்கிறது’ என அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதி, ‘கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில் குடிநீர் மற்றும் போதுமான கழிப்பிட வசதிகளை உறுதி செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டார்.
‘கோயில் திருவிழா என்பது சடங்கு மட்டுமல்ல.
அது ஒரு கலாச்சார நிகழ்வு’ என கருத்து தெரிவித்த நீதிபதி, ‘இந்த மாதிரியான திருவிழாக்களின்போது சிறிய வியாபாரிகள் நம் நாட்டின் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும். அது விடுத்து வெளிப்படை தன்மை என்ற பெயரில் அதிக விலைக்கு டெண்டர் கேட்டால் அது சாதாரண சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள்.
அதனால், அதிக விலைக்கு டெண்டர் குறிப்படாமல் சிறு வியாபாரிகள் பங்கேற்கும் வகையில் டெண்டர் கோர வேண்டும். இல்லாவிட்டால் கோயில் தனது கலாச்சார மதிப்பை இழந்து விடும்’ எனத் தெரிவித்தார். மேலும், ‘கோயில் திருவிழாக்கள் வருவாய் ஆதாரமாக மட்டும் பார்க்காமல், கோயில் திருவிழாக்களில் உள்நாட்டு பொருட்களை விற்பனை செய்ய சிறு வியாபாரிகள், பெண்கள், பழங்குடியினர்களை ஊக்குவிக்க வேண்டும்’ என இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டார். மேலும், கோட்டை மாரியம்மன் கோயில் சொத்துகள் அக்கிரமிப்பில் உள்ளதா, இல்லையா என கண்டறிந்து, ஆக்கிரமிப்பில் இருந்தால் அந்நிலங்களை மீட்கவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.