அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5,000 சம்பளம் உயர்வு: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் 8,741 பேர், அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக உதவி பேராசிரியர்கள் 319 பேரும் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் 586 பேர் ஆகமொத்தம் 9,646 தற்காலிக ஆசிரியர்கள் இதன் மூலம் பயனடைவர்.
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊதியம் உயர்த்தப்படுவதாக
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவித்துள்ளார்.
முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக உதவிப்பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்கள் என அனைவருக்கும் 01.03.2026 முதல் கூடுதலாக ரூ.5,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது
பல்வேறு நீதிமன்ற வழக்குகளினால் மேல்நடவடிக்கை தாமதமான நிலையில், தற்போது 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதன்மை தேர்வுகள் நடத்தப்பட்டு, தற்போது 5 பாடப்பிரிவுகளுக்கு உதவிப்பேராசிரியர்களை தேர்வு செய்ய நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள பாடப்பிரிவுகளுக்கும் விரைவில் நேர்காணலுக்கு அழைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணாக்கர்களின் கல்விச் சேவை எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அவ்வப்போது கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். மேலும், 2016-இல் இருந்து உயர்த்தப்படாமல் இருந்த இவர்களின் ஊதியம் 2022-ல் ரூ.15,000-லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது. பின்னர், மீண்டும் 2 ஆண்டுகளிலேயே (2024-ல்) ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டது.