பொதுத்தேர்வு வினாத்தாள் பிழைகள்: புகார்களை உடனே தெரிவிக்க புதிய நடைமுறை அமல் - டி.ஜி.இ அறிவிப்பு
பொதுத்தேர்வு வினாத்தாள் பிழைகள் குறித்த புகார்களை, தேர்வு நடைபெற்ற அன்றே பள்ளித் தலைமையாசிரியர் மூலம் dgequestionpaperqueries@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் துல்லியமான விளக்கத்துடன் அனுப்ப வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) தற்போது நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் குறித்து மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்களில் ஏதேனும் பிழைகள் அல்லது தெளிவற்ற வினாக்கள் இருந்தால், அவற்றை முறைப்படி தெரிவிப்பதற்கான புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மேலும், புகாரைப் பதிவு செய்யும்போது எந்த வினா எண், வினாத்தாளின் எந்தப் பகுதி மற்றும் அதில் உள்ள பிழை என்ன என்பது குறித்த துல்லியமான விளக்கத்தை அளிக்க வேண்டியது அவசியமாகும். ஆதாரமற்ற அல்லது தெளிவற்ற முறையில் மொட்டையாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்படும். மின்னஞ்சல் வழியாக மட்டுமே இத்தகைய கோரிக்கைகளை ஏற்க முடியும் என்பதால், மற்ற வழிகளில் அனுப்பப்படும் கடிதங்கள் செல்லுபடியாகாது. இந்த புதிய நடைமுறையை அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வினாத்தாள் பிழைகள் குறித்த குழப்பங்களுக்கு விரைவான மற்றும் முறையான தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.