கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டப்பட்டுள்ளன : தமிழ்நாடு அரசு அறிக்கை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில், 5 ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில்...
* ஐந்து ஆண்டுகளில் ரூ.19,694 கோடியில் ஏழைகளுக்காக 4,29,394 வீடுகள்!
* ரூ. 482 கோடியில் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் 5,281கட்டமைப்புகள் மேம்பாடு!
* 25.56 இலட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடு மனை பட்டா!
* வெற்றிப் பாதையில் முத்திரை பதிக்கும் எல்லார்க்கும் எல்லாம் என்னும் தத்துவம்!
*கலைஞர் கனவு இல்லம் :
எல்லோர்க்கும் உணவு தேவை. உணவுப் பொருள்களை ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்குகிறது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் நேரடி வருவாய் இல்லாத மகளிருக்கு நேரடியாகவே மாதம் ரூ.1000 தருகிறது. இந்த 1000 ரூபாயைக் கொண்டு தேவையானவைகளை வாங்கிக் கொள் என வழிகாட்டுகிறது திராவிட மாடல் அரசு!
அடுத்து, எல்லோர்க்கும் வீடு வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம்!
தமிழ்நாட்டில் உள்ள குடிசைகள் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு எல்லோர்க்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பது திராவிட மாடல் அரசின் இலக்கு. இதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் 8 இலட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏழை எளிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள தலா ரூ. 3 இலட்சத்து 50 ஆயிரம் வீதம் 2 இலட்சம் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அனுமதித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் இரண்டே ஆண்டுகளில் 2 இலட்சம் வீடுகளில் 1,79,850 கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மீதி வீடுகள் கட்டப்படுகின்றன. இந்த ஆண்டில் மேலும் 1 இலட்சம் வீடுகள் ரூ. 3500 கோடியில் கட்டப்படும் என அறிவித்துள்ளது திராவிட மாடல் அரசு.