உத்தராகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு!
டேராடூன்: உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 5 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். கடந்த 2022-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் பதவியேற்றார். அவருடன் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். சமூக நலன் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சந்தன் ராம்தாஸ் கடந்த 2023-ல் உயிரிழந்ததை அடுத்து, அமைச்சரவையின் பலம் 8 ஆக குறைந்தது. இதன் தொடர்ச்சியாக, நிதி அமைச்சராக இருந்த பிரேம் சந்த் அகர்வால் கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அமைச்சரவையின் பலம் 7 ஆக சரிந்தது. அரசியலமைப்பு விதிகளின்படி உத்தராகண்ட் அமைச்சரவையில் அதிகபட்சமாக 12 பேர் வரை இருக்கலாம்.
உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது அமைச்சரவையை முழு அளவில் இன்று விரிவாக்கம் செய்துள்ளார். கஜன் தாஸ், பரத் சிங் சவுத்ரி, மதன் கவுஷிக், பிரதீப் பத்ரா, ராம் சிங் கைடா ஆகிய 5 எம்எல்ஏக்கள் டேராடூனில் உள்ள மக்கள் பவனில் இன்று அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆளுநர் குர்மித் சிங், அவர்களுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் ஆளுநர் குர்மித் சிங்கும், முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.