பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னை: சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகப் பேசியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையில் கடந்தாண்டு ஏப்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அப்போதைய திமுக அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அவரது இந்த பேச்சு காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை இழந்தார். இந்நிலையில் அவதூறாகப் பேசிய பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனி நபர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் பொன்முடி நேரில் ஆஜராக அந்த நீதிமன்றம் சம்மன் பிறப்பித்தது.
இந்நிலையில் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை எதிர்த்தும், வழக்கு விசாரணைக்கு தடை கோரியும் பொன்முடி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நேற்று நடந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “முன்னாள் அமைச்சரின் அந்த பேச்சு இருதரப்புக்கும் இடையே மோதலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டதாக இல்லை.
இந்த புகாரை வழக்காக விசாரணைக்கு எடுக்கும் முன்பாக அரசின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற எங்களது தரப்புவாதத்தை குற்றவியல் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை” என வாதிட்டார். அதையடுத்து பொன்முடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார். வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளித்தார். அத்துடன் இது தொடர்பாக உமா ஆனந்தன் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.