சென்னையை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது; புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம்: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பேட்டி
கவுகாத்தி: 2026 ஐபிஎல் சீசனின் 3வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 127 ரன்களுக்குச் சுருண்டது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி சூர்யவன்ஷி, பராக்கின் அதிரடியால் 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி
பெற்றது.
வெற்றி குறித்து ரியான் பராக் கூறியதாவது: பிட்ச் ஈரப்பதத்துடன் இருந்ததால் அது பவுலர்களின் பணியை எளிதாக்கியது. கவுகாத்தி மைதானம் ஜட்டு பாய்க்கு (ரவீந்திர ஜடேஜா) மிகவும் சாதகமாக அமைந்தது. பிரிஜேஷ் சர்மாவும் பிரமிக்க தக்க வகையில் பந்துவீசினார். அனைவருமே தங்களது பங்களிப்பைச் சரியாக வழங்கியதால் வெற்றி வசமானது. இந்தப் போட்டியில் 15 வயது வைபவ் 17 பந்துகளில் 52 ரன்கள் குவித்தது வியப்பாக இருந்தது. வைபவ் வலைப்பயிற்சியில் விளையாடுவதைப் பார்த்தபோதே நாங்கள் மிரண்டு போனோம். அவனிடம் நான் ஒன்றே ஒன்றுதான் சொன்னேன்.
இந்த சீசனில் 14 போட்டிகளிலும் அணியில் நீ நிச்சயம் விளையாடுவாய். ஊடகங்களில் வரும் செய்திகளோ அல்லது ஆட்டத்தில் நடக்கும் விஷயங்களோ உன்னைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொள். இடது மற்றும் வலது கை பேட்ஸ்மேன் கூட்டணி அமைய வேண்டும் என்பதற்காகவே துருவ் ஜூரலை 3வது இடத்திலும், ஹெட்மையரை 5வது இடத்திலும் களம் இறக்கத் தீர்மானித்தோம். இந்தத் திட்டம் இன்று பெரிதும் கைகொடுத்தது. இதே போல ஒரு வலுவான அணியாக வரும் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றி பெற முயற்சிப்போம். நாங்கள் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். இந்த ஆண்டு கோப்பையை வெல்வது மட்டுமே எங்களது இலக்கு. இவ்வாறு ரியான் பராக் கூறினார்.