10-வது முறை வெற்றி பெற்ற திரிணமூல் காங். நிர்வாகி
கொல்கத்தா: மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தலில் 207 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ளது. ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 82 வயதான சோபன்தேவ் சட்டோபாத்யாயா 10-வது முறையாக வெற்றிபெற்று எம்எல்ஏவாகி சாதனை படைத்துள்ளார். அவர் பாலேகஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு 61,476 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்தார். 1998-ல் மம்தா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியது முதல் கட்சியின் நிர்வாகியாக நீடித்து வருகிறார் சோபன்தேவ். மேலும் சட்டப் பேரவையின் முதலாவது திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏவும் இவர்தான். 1998-ல் நடந்த சட்டப் பேரவை இடைத்தேர்தலில் சோபன்தேவ் வெற்றி பெற்றார்.
அதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்த அவர் 1991-ல் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று முதன்முறையாக எம்எல்ஏவாகத் தேர்வானார். அப்போது முதல் 2026 வரை 10 தேர்தல்களில் வெற்றிபெற்று எம்எல்ஏவாகி சாதனை படைத்துள்ளார். இது குறித்து சோபன்தேவ் சட்டோ பாத்யாயா கூறும்போது, “முதல்வர் மம்தாவுடன் இணைந்து செயல்பட்டு கட்சியை வளர்த்தவன் நான். சுமார் 13 ஆண்டுகள், இடது சாரிகளின் ஆட்சி நடந்தபோது எதிர்க்கட்சி எம்எல்ஏவாக குரல் கொடுத்தேன். பாஜகவை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்வோம்” என்றார்.