விஜய்யுடன் தலைமைச் செயலர், டிஜிபி முக்கிய ஆலோசனை: அரசு நலத் திட்டங்கள் குறித்து விளக்கம்
சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் அரசு உயர் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக ஆட்சி அமைக்கத் தயாராகி வரும் நிலையில், தமிழக அரசின் உயர் அதிகாரிகள் தவெக தலைவர் விஜய்யை நேற்று பட்டினப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக தலைமைச் செயலர் சாய்குமார், டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், உள்துறைச் செயலர் மணிவாசன் மற்றும் பல்வேறு முக்கியத் துறைச் செயலர்கள் பங்கேற்று, புதிய அரசு பொறுப்பேற்பதற்கான நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
அதன்படி, ஆட்சி மாற்றத்துக்கான முன்னேற்பாடுகள், புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிர்வாகக் கட்டமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. புதிய அரசு பொறுப்பேற்பதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய சட்டப்பூர்வ மற்றும் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலர் சாய் குமார் விளக்கம் அளித்தார். மகளிர் உரிமைத் தொகை: தொடர்ந்து, பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான கால அட்டவணை மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்களை தடையின்றித் தொடர்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு துறைச் செயலர்கள் தங்கள் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.
மேலும், கடந்த திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தேர்தல் கால சிறப்பு நிதியாக பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை ரூ.5,000 வழங்கப்பட்டிருந்த சூழலில், தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் இத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக அறிவித்திருந்தது. அந்த வகையில், இந்த மாதத்துக்கான தொகையை தடையின்றி வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.