முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதி
முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்று பேரவையில் முதல்வர் விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 144 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து தவெக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
முன்னதாக தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றுகையில், "திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களைச் செய்திருக்கிறார். அந்த திட்டங்களை எல்லாம் நீங்கள் தொடர வேண்டும். இதில் அரசியல் செய்ய வேண்டாம். மகளிர் உரிமைத் தொகைக்காக 1.31 கோடி தாய்மார்கள் காத்திருக்கின்றனர். அதேபோல கல்லூரி மாணவர்கள் புதுமைப்பெண் திட்ட நிதிக்காக 7 ஆம் தேதி முதல் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் நிலையில் காலை உணவுத் திட்டத்திற்காக பள்ளி மாணவர்கள் காத்திருக்கிறார்கள். இதுபோல பல்வேறு திட்ட பயனாளிகள் காத்திருக்கிறார்கள். விஜய் பதவியேற்றதும் திட்டங்களை நிறைவேற்ற கால அவகாசம் வேண்டும் என்று. கேட்டிருக்கிறார். ஆனால் மக்களை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காதீர்கள்" என்று கூறினார். இதேபோல முந்தைய தலைவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் தொடர வேண்டும் என்று பலரும் பேசினர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய், "ஆதரவு தெரிவித்தவர்களுக்கான அரசு மட்டுமல்ல, எதிர்த்தவர்களுக்குமான அரசாகவும் இருக்கும். முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என்ற உறுதியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். இதையடுத்து மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்ட நிதிகள் இம்மாதம் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.