அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டத்துக்கு ரயில்வே ஒப்புதல்
சென்னை: ரூ.993 கோடி மதிப்பிலான அரக்கோணம்-செங்கல்பட்டு இடையிலான இரட்டைப் பாதை திட்டத்திற்கு இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. 68 கிலோமீட்டர் நீளமுடைய அரக்கோணம்-செங்கல்பட்டு வழித்தடமானது, சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ஆகிய இடங்களை இணைக்கும் சென்னை புறநகர் ரயில்வேயின் முக்கிய வலையமைப்பாகும். சென்னை புறநகர் ரயில்வே வலையமைப்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதில், அரக்கோணம்-செங்கல்பட்டு இரட்டைப் பாதை திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். தாமதமில்லாத ரயில்கள் இயக்கம் மற்றும் ரயில்களின் செயல்பாட்டுத் திறனை இந்த இரட்டைப் பாதை திட்டம் மேம்படுத்தும் என்று அவர் கூறினார்
இந்த ரயில்வே வழித்தடம் தெற்கு ரயில்வேயால் இயக்கப்படுகிறது. தினசரி புறநகர் பயணிகள் ரயில் மட்டுமின்றி, நீண்ட தூர மற்றும் சரக்கு ரயில்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் முக்கிய வழித்தடங்களில் இதுவும் ஒன்றாகும். இத்திட்டம் சரக்கு போக்குவரத்திற்கும் பெரிதும் பயனளிக்கும். இந்த வழித்தடம் சிமெண்ட், உணவு தானியங்கள், இரும்பு மற்றும் வாகனங்கள் போன்ற பொருட்களை, தொழில்துறை மற்றும் துறைமுகப் பகுதிகளுக்கு மிக விரைவாகக் கொண்டு செல்ல பயன்படும். இந்த ரயில் பாதை, மஹிந்திரா வேர்ல்ட் சிட்டி, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் மற்றும் இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல முக்கியத் தொழில்துறை மண்டலங்கள் வழியாகச் செல்கிறது. எனவே, தொழில்துறை செயல்பாடுகளுக்கு இந்த இரட்டைப் பாதை திட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது